உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று புவி வெப்பமடைதல். புவி வெப்பமடைதல் பிரச்சினை இன்று பூதாகரமாகி வருகிறது.
- வெப்பநிலை அதிகரிப்பு,
- கடல்மட்ட உயர்வு,
- தண்ணீர் பற்றாக்குறை,
- நோய்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதே புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம்.
சுற்றுச்சூழல் சீர்கேடும், புவி வெப்பமடைதலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள சிக்கல்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமடைவதை குறைக்கவும் நமது வாழ்க்கை முறைகளில் மாற்றம் தேவை.ஒர் அறையைவிட்டு வெளியேறும்போது, அந்த அறையில் உள்ள விளக்குகள், ஃபேன் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களையும் அணைப்பதில் இருந்து இந்த நடவடிக்கைகளை நாம் தொடங்கலாம்.
- மின்சாதனங்கள் கீழ்க்கண்ட வகையில் ஒரு யூனிட் மின்சாரத்தை செலவிடுகின்றன:
- ஏ.சி. பெட்டி ஒரு மணி நேரம் இயங்க, ஹீட்டர் ஒரு மணி நேரம் இயங்க, பிரிட்ஜ் 7 மணி நேரம் இயங்க, டிவி பெட்டி 10 மணி நேரம் இயங்க, ஃபேன் 15 மணி நேரம் ஓட, விளக்கு 29 மணி நேரம் எரிந்தால்.
- ஹீட்டர், வாஷிங் மிஷின், ஏ.சி., பிரிட்ஜ் போன்றவை அதிக மின்சாரத்தை செலவு செய்கின்றன. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற குளிர்மைப்படுத்தும் கருவிகள், ஹீட்டர்களை குறைந்த அளவீடுகளில் வைத்து பயன்படுத்துங்கள். ஒரு டிகிரி செல்சியஸ் குறைத்தால்கூட பெருமளவு மின்சாரம் சேமிக்கப்படும்.
- டிவி, டிவிடி பிளேயர் போன்ற எந்த நவீன மின்சாதனத்தையும் 'ஸ்டாண்ட்பை' நிலையில் வைக்க வேண்டாம். இதனால் மின்சாரம் தேவையின்றி விரயமாகும். பயன்படுத்தாத நேரத்தில் கம்ப்யூட்டர் மானிட்டர்களை அணைத்து வைக்கலாம். தேவைப்படாத மின்சாதனங்களை எப்பொழுதும் அணைத்துவிட வேண்டும்.
- குண்டு பல்புகளில் 90 சதவிகித மின்சக்தி வெப்பமாக மாறி வீணாகிறது. அதேநேரம், சாதாரண குண்டு பல்பு எரிய செலவிடும் மின்சக்தியில் 20 சதவிகிதம் மட்டுமே சி.எப்.எல். விளக்கு எரியத் தேவைப்படுகிறது. எனவே, குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, சி.எப்.எல். விளக்குகளை பொருத்தினால் மின்செலவு குறையும், மின்கட்டணமும் குறையும். சி.எப்.எல். விளக்கு ஒன்று அதன் வாழ்நாளில் 7,000 மணி நேரம் எரியக்கூடியது.
மின்சாரத்தை குறைவாகச் செலவு செய்யும் மின்சாதனங்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம். மின்சாதனங்களை சிறப்பாக பராமரிப்பதன் மூலம் மின்செலவை குறைக்கலாம்.
யாரும் செய்யலாம்:
- சிக்னலில் நிற்கும்போது வாகன எஞ்சினை அணைத்து வைக்கலாம்.
- கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 80 சதவிகித சாலைகளை அடைத்துக் கொள்கின்றன. ஆனால் அந்த வாகனங்களில் பயணம் செய்வோரது எண்ணிக்கை 22 சதவிகிதம் மட்டுமே. அதேநேரம் 75 சதவிகித சாலைப்பயணிகள் பஸ்களில்தான் செல்கின்றனர். எனவே, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கவும், அதனால் வெளியிடப்படும் புகையால் உருவாகும் நோய்களில் இருந்து தப்பவும் பஸ்களை பயன்படுத்துவோம்.
- சென்னையில் வாழ்பவர்கள் மின்ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துலாம். நீண்டதூர பயணங்களுக்கும் ரயில்களே சிறந்தவை. விமானங்களில் செல்வதைவிட ரயிலில் செல்வது 10 மடங்கு குறைவான எரிசக்தியையே செலவழிக்கிறது.
- அருகிலுள்ள காய்கறி கடை, மளிகைக் கடை, பால் வாங்க சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்லலாம். சைக்கிள் ஓட்டுவது, நடைப்பயிற்சி உடலை சிறப்பாகப் பராமரிக்கும். நோய்கள் பெருகிவிட்ட நகர வாழ்வில் இந்த இரண்டும் ஆரோக்கியத்துக்கு அவசியம்.
- தண்ணீரை சேமிக்க எளிதான வழி தேவைப்படாத நேரத்தில் குழாய்களை அடைப்பது, ஒழுகும் குழாய்களை சீரமைப்பது.
- தண்ணீரை நாம் எப்படி வீணாக்குகிறோம் என்பது பற்றி சந்தேகம் இருந்தால், ஒரு நாளில் எத்தனை முறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நிரப்புகிறோம் என்றும், பயணங்களின்போது குடிநீல் பாட்டில்கள் எத்தனை வாங்குகிறோம் என்றும் கணக்கிட்டுப் பார்க்கலாம்.
- காய்கறி கழுவும்போது, பல்துலக்கும்போது, ஷேவிங் செய்யும்போது குழாயை திறந்துவிட்டுக் கொண்டே வேலை செய்ய வேண்டாம். வாளி அல்லது கப்-பில் எடுத்து பயன்படுத்துங்கள். வாளியில் தண்ணீர் நிரப்பி குளியுங்கள். ஷவரில் குளித்தால் எவ்வளவு நீர் பயன்படுத்துகிறோம் என்றே தெரியாது, தண்ணீர் தேவையின்றி வீணடையும்.
- ஆங்கில கழிப்பறைகளுக்கு பதிலாக, இந்திய கழிப்பறைகளையே பயன்படுத்துங்கள். அதில் மிகக் குறைவாகவே தண்ணீர் செலவாகிறது. வாகனங்களை கழுவ, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஹோஸ் பைப்பை பயன்படுத்தாதீர்கள். வாளியில் பயன்படுத்தும் போது குறைவாகவே தண்ணீர் செலவாகும்.
- வீட்டு சுற்றுப்பாதைகள், வெளிப்புறப் பகுதிகள், மரங்களைச் சுற்றி சிமெண்ட் தளம் அமைக்காதீர்கள். மழைநீர் பூமிக்குள் சென்றால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும். சமையலறையில் வெளியேறும் தண்ணீரை தாவரங்களுக்கு பாய்ச்சுங்கள்.
- பயணங்களின்போது போதுமான அளவு தண்ணீரை எடுத்துச் சென்றால், செலவு மிச்சம். பிளாஸ்டிக் பாட்டில்கள் வீணாவதும் குறையும்.
இந்தியாவில் 17 கோடி பேர் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வளரும் நாடுகளில் இறந்துபோவோரில் 80 சதவிகிதம் பேர் தண்ணீர் சார்ந்த நோய்களால் பலியாகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 20,000.
தண்ணீர் அமிழ்தம் என்றார் ஒரு விஞ்ஞானி. எனவே, அளவோடு பயன்படுத்தாவிட்டால் அந்த அமுதும் நஞ்சாகும், அதாவது தீர்ந்து போகும்.
யாரும் செய்யலாம்:
வயிற்றுக்கு கொஞ்சம்
- வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு, பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம்.
- பருவகாலத்துக்கு ஏற்ப கிடைக்கும் உள்ளூர் காய்கறி, பழங்களையே வாங்குங்கள். இது சத்தானது, உடலுக்கு உகந்தது, செலவு குறைந்தது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லிகள் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட காய்கறி, பழங்களை வாங்குங்கள். வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறி, பழங்கள் பயணம் செய்யும்போது அதிக மாசு வாயுக்களை வெளியிடுகின்றன.
- சங்கிலித் தொடர் கடைகள் மற்றும் பழமுதிர் நிலையங்களில் விற்கப்படும் அயல்நாட்டுப் பழங்கள், காய்கறிகள் நெடுந்தொலைவு பயணம் செய்து நம்மை அடைகின்றன. நீண்டகாலம் சேமித்து வைக்க வசதியாக அவற்றின் மீது பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன.
- பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள். காகித பயன்பாட்டை குறையுங்கள். கடைகளுக்குச் செல்லும்போது துணி அல்லது சாக்குப் பைகளை எடுத்துச் செல்லுங்கள். ஹோட்டலுக்கு உணவு வாங்கச் செல்லும்போது பாத்திரம் எடுத்துச் செல்லுங்கள்.
- கம்ப்யூட்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கும்போது, இரண்டு பக்கமும் பயன்படுத்துங்கள். குறிப்புகள் எழுத ஒரு பக்கம் அச்சிடப்பட்ட தாள்களை பயன்படுத்துங்கள். பரிசுப் பொருள்களை சுற்றிவரும் காகிதங்கள், கடித உறைகளை மறுபடி பயன்படுத்துங்கள்.
- வெளியே செல்லும்போது, சுற்றுலா செல்லும்போது பையில் உங்களுக்கென ஒரு டம்ளரை எடுத்துச் செல்லுங்கள். மக்காத பிளாஸ்டிக் கோப்பைகள், காகித கோப்பைகள் விரயமாவதை இதன் மூலம் தடுக்கலாம்.
- வீட்டில் மறுசுழற்சி செய்யத்தக்க, மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை பிரியுங்கள். பிளாஸ்டிக், பேப்பர், கண்ணாடி, உலோக பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம். காய்கறி, உணவு போன்ற மக்கும் கழிவுகளை மண்புழு உரமாக்கி, வீட்டுத் தாவரங்களுக்கு இடலாம்.
மூன்று 'ஆர்'. (Three-R)
எந்தப் பொருளையும் குறைவாக பயன்படுத்த வேண்டும், மறுபடி பயன்படுத்த வேண்டும், மறுசுழற்சி செய்ய முயற்சிக்க வேண்டும். இவை 'மூன்று ஆர்' என்று அழைக்கப்படுகின்றன. தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்கினால், மறுபடி பயன்படுத்தவோ, மறுசுழற்சி செய்யவோ தேவை இருக்காது. பேஸ்ட், சோப்பு உள்ளிட்ட 'பேக்' செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் விற்பனைக்குக் கிடைக்கும் அளவில் பெரிதாக வாங்குவதன் மூலம், குப்பைகளை குறைக்கலாம். செலவும் குறையும்.
உயிர் இயந்திரங்கள்
- மாசுபாடுகளை மறுசுழற்சி செய்யும் மரங்களை வளர்க்கலாம். ஒரு மரம் தன் வாழ்நாளில் 1000 கிலோ கார்பன் டைஆக்சைடை உறிஞ்சிக் கொள்கிறது. கார்பன் டைஆக்சைடுதான் புவி வெப்பமடையக் காரணம். குறைந்த தண்ணீரே தேவைப்படும் உள்ளூர் மரங்களை வளர்க்கவும். மரங்கள் நிழலையும், தென்றல் காற்றையும் தரும். மரம் வளர்க்க முடியாதவர்கள், தொட்டிகளில் செடி வளர்க்கலாம். இது மனதிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
கருத்துகளை விதைத்தல்
- சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும், அதில் தனிமனிதர்களின் பங்கு பற்றியும், விளைவுகளையும் மற்றவர்களிடம் கூறுங்கள். எந்த வகையான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இதைத் தடுக்க முடியும் என்பதை விளக்குங்கள். பசுமை வாழ்க்கைமுறையை மேற்கொள்ள வலியுறுத்துங்கள்.